கொடைக்கானல்: கொடைக்கானலில் வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து ‘மலைகளின் இளவரசி’ எனப்படும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், செட்டியார் பூங்கா திறக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்டவை சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன.
நேற்று வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். காலை முதலே இதமான குளிருடன் வானம் தெளிவாக காணப்பட்ட நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மேகமூட்டம், சாரல் மழை பெய்தது.
இந்த மாறுபட்ட சீதோஷ்ண நிலையை சுற்றுலாப்பயணிகள் ரசித்து சென்றனர். அதேபோல் பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் பூத்து குலுங்கிய வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கோக்கர்ஸ் வாக்கில் திரண்டு நின்ற மேகக்கூட்டங்களை கண்டு மெய்சிலிர்த்தனர். இதற்கிடையே விரைவில் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.