வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, கடம்பூரில் 80 மி.மீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் 40 மி.மீ, செஞ்சி, கல்லட்டி, திருமயம் 20 மி.மீ, சோளிங்கர், பள்ளிப்பட்டு, குமாரபாளையம், திருபுவனம், கீழ்பென்னாத்தூர் 10 மி.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வளி மண்டலத்தில் கீழ் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. மேலும் வெப்ப சலனம் நீடித்து வருகிறது.

இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். உள் தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதவிர தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இன்றும் சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். இந்நிலையில், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் வீசும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு செல்ல வேண்டாம். மேலும், தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இரவு 11.30 மணி வரை கடலில் 3 மீட்டர் வரை அலை எழும்பும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: