பாடகர் எஸ்.பி.பி உடல் தாமரைப்பாக்கத்தில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் தாமரைப்பாக்கத்தில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்குன்றம் அருகே தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் செய்யப்பட்டது. 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்தனர். எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.சரண் மற்றும் குறும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர். இறுதி சடங்கில் எஸ்.பி.பி.யின் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். எஸ்.பி.பி உடலுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இறுதி அஞ்சலி செலுத்தினார். தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு எஸ்.பி.சரணை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக 50 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். இதனால் திரையுலகமும், இசை ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். எஸ்பிபி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

பாடும் நிலா பாலு  என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பின்னணி பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (74), கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5ம் தேதி சென்னை  சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்ந்தவுடன் அவர் வெளியிட்ட  வீடியோவில், சாதாரண காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஓரிரு நாட்களில் வீடு திரும்பி  விடுவேன். தயவுசெய்து யாரும் எனக்கு போன் செய்து நலம் விசாரிக்க  வேண்டாம் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ம்  தேதி எஸ்.பி.பியின் உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை  வெளியிட்டது. ஓரிரு நாளில் அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண், எனது தந்தை  எஸ்.பி.பி அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். விரைவில் குணமடைந்து வீடு  திரும்புவார்  என்று வீடியோ வெளியிட்டார். இதையடுத்து எஸ்.பி.பி கட்டை  விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதனால் அவரது ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். எஸ்.பி.பி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து  எஸ்.பி.பியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை  வெளியிட்டது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும், கடந்த  ஆகஸ்ட் 18ம் தேதி எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக  இருப்பதாகவும், அவருக்கு உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியுடன் எக்மோ கருவி  பொருத்தி செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்தது.

இதை தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் சார்பில்  கடந்த 20ம் தேதி மாலை 6 மணியளவில், எஸ்.பி.பி நலம்பெற வேண்டி கூட்டுப்  பிரார்த்தனை நடந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை எஸ்.பி.பியின் உடல் நிலை மோசம் அடைந்தது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. தொடர்ந்து  அவர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் மற்றும்  எக்மோ கருவி  உதவியுடன்  சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டாக்டர்களால் மீட்க முடியாத  நிலைக்கு  அவரது உடல்நிலை சென்று  விட்டது. நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு எஸ்.பி.பி காலமானார். இந்த செய்தி அறிந்ததும் திரையுலகினரும் இசை ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். அவரது உடல் மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்.பி.பியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பகல் 12.45 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: