பாடும் நிலாவை இழந்தது இசை வானம்: எஸ்.பி.பி ஒரு சகாப்தம்

ஸ்ரீபதி  பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்கிற எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆந்திரா  மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டியில் 1946, ஜூன் 4ம் தேதி  பிறந்தார். அவரது தந்தை ஹரிகதா கலைஞர். 2 சகோதரர்கள் மற்றும் 5 சகோதரிகள்  கொண்ட பெரிய குடும்பம். சகோதரிகளில் எஸ்.பி.சைலஜா, தென்னிந்திய மொழிகளில் 5  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சில படங்களில்  நடித்திருக்கிறார். இளம் வயதிலேயே பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்க தேர்ச்சி  பெற்ற எஸ்.பி.பி., ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பதில்  கைதேர்ந்தவராக இருந்தார். தனது மகன் இன்ஜினியராக வேண்டும் என்பது தந்தையின்  ஆசையாக இருந்தது. இதனால் எஸ்.பி.பி., அனந்தபூர் ஜே.என்.டி.யு பொறியியல்  கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போது டைபாய்டு காய்ச்சலால்  பாதிக்கப்பட்ட அவர், தனது இன்ஜினியரிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு,  பிறகு சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

அப்போது  கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றார்.  மெல்லிசைக்குழு ஒன்றையும் நடத்தினார். அதில் பங்குபெற்றவர்களில் இளையராஜா  மற்றும் அவரது சகோதரர்கள் ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோர்  குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளிலும், நாடகம்  மற்றும் கச்சேரிகளில் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்த எஸ்.பி.பி.,  சினிமாவில் பின்னணி பாடகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போது அனைத்து  மொழி படங்களும் சென்னையில் தயாராகி வந்ததால், இங்கேயே தங்கி சினிமா  வாய்ப்பு தேடினார். 1966ல் ஒரு தெலுங்கு படத்தில் பாடகராக  அறிமுகமானார். தமிழில் அவர் முதலில் பாடிய படம், ‘ஓட்டல் ரம்பா’. இதில்  ௭ம்.௭ஸ்.விஸ்வநாதன் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து, ‘அத்தானோடு  இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு’ ௭ன்ற பாடலை பாடினார். ஆனால், சில  காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. பிறகு ஜெமினி கணேசன் நடித்த ‘சாந்தி  நிலையம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை எனும் இளைய கன்னி’ என்ற பாடலை  பாடினார்.

ஆனால், இப்படம் ரிலீசாவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப்  பெண்’ படம் வெளியாகி, அதில் அவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்  முதல் பாடலானது. 1960களின் பிற்பகுதியில் தமிழ்ப் படவுலகில்  அறிமுகமான எஸ்.பி.பி., தொடர்ந்து 60 ஆண்டுகளாக முன்னணி பாடகராக இருந்தார்.  16 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, கின்னஸ் உலக சாதனை  புத்தகத்தில் இடம்பெற்றார். 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய  விருது பெற்றுள்ளார். அவர் முறைப்படி கர்நாடக இசை பயின்றது இல்லை  என்றாலும், ‘சங்கராபரணம்’ என்ற படத்தில் கர்நாடக இசையில் இடம்பெற்ற  பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதை 4 மொழிகளுக்கு  பெற்ற ஒரே பாடகர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.பி  பாடகர் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45க்கும்  மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். டப்பிங் கலைஞராகவும் இருந்தார்.  கமல்ஹாசன் தமிழில் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 120க்கும்  மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த்,  சல்மான்கான், கே.பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரீஷ் கர்னாட், ஜெமினி  கணேசன், அர்ஜூன், நாகேஷ், கார்த்திக், ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்  படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படம்  தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டபோது, மொத்தம் 10 கேரக்டர்களில் 7  கேரக்டர்களுக்கு (பெண் கேரக்டருக்கும் சேர்த்து) டப்பிங் பேசினார். சிறந்த  டப்பிங் கலைஞருக்கான ஆந்திரா மாநில அரசின் நந்தி விருதுகளை பெற்றுள்ள  எஸ்.பி.பி., தெலுங்கில் இருந்து தமிழில் வெளியான ‘ராமராஜ்ஜியம்’ என்ற  படத்துக்காக பாலகிருஷ்ணாவுக்கு டப்பிங் பேசியிருந்தார்.

பன்முகத்திறமை  கொண்ட எஸ்.பி.பிக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை  வழங்கி கவுரவித்தது. 2016ல் 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்,  இந்திய திரைப்பட சாதனையாளர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பலமுறை தமிழக  அரசின் விருதுகளை பெற்றுள்ள அவர், ஆந்திரா அரசின் நந்தி விருதை 25 முறை  பெற்று சாதனை படைத்துள்ளார். 1981ல் தமிழக அரசின் கலைமாமணி விருது  பெற்றார். 2015ம் ஆண்டுக்கான கேரள அரசின் ஹரிவராசனம் விருதும் அவருக்கு  கிடைத்துள்ளது.

* எஸ்.பி.பி ஓவியங்கள் வரைவார். புல்லாங்குழல் வாசிப்பார்.

* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படுகா, மராட்டி என 16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். தன் குரல் வளத்தை பாதுகாக்க எந்த சிறப்பு கவனமும் மேற்கொள்ளாமல் இருந்தார். குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு உள்பட அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்.

* சைவ உணவை விரும்பி சாப்பிட்ட எஸ்.பி.பி., 5 நிமிடங்களில் சாப்பிட்டு விடுவார். மிகவும் விருப்பமான உணவு, தயிர் சாதம்.

*  தமிழில் ரஜினிகாந்த், ராதா நடித்த துடிக்கும் கரங்கள் படம் முதற்கொண்டு பல்வேறு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார், எஸ்.பி.பி.

* கேளடி கண்மணி படத்தில் `மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலையும், அமர்க்களம் படத்தில் `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடலையும் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்தினார்.

* எஸ்.பி.பிக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி, கே.ஜே.யேசுதாஸ். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியை மட்டும் கேட்கவே முடியாது என்று பாராட்டுவார்.

* கர்நாடக இசை கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பியின் தணியாத தாகம்.

* ஜெயம் ரவி, ஸ்ரேயா நடித்த ‘மழை’ என்ற படத்துக்காக எஸ்.பி.பி ஒரு பாடலை பாடினார். அவர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து பாடிவிட்டு வெளியேறிய சம்பவம், வெறும் 12 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

* கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கும் எஸ்.பி.பியின் ஆர்வத்தை கேள்விப்பட்ட சச்சின், தனது ஆட்டோகிராஃப் போட்ட பேட் ஒன்றை பரிசளித்தார்.

* இளையராஜா, எஸ்.பி.பி இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால், ஒருவரை ஒருவர் `வாடா, போடா’ என்று செல்லமாக பேசிக்கொள்வார்கள்.

* ஷ்யாவை தவிர எஸ்.பி.பி சென்று வராத நாடுகளே இல்லை.

* எஸ்.பி.பியின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்பம் முதல் இன்றுவரை அவருடனேயே இருந்தார். எஸ்.பி.பியின் கால்ஷீட் மற்றும் உணவு, உடல்நலம் ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டது அவர்தான்.

*  எஸ்.பி.பியின் இளம் வயதில் மெல்லிசை பாடல் போட்டி ஒன்றில் பாட அவருக்கு தெரியாமலேயே நண்பர் ஒருவர் பெயர் கொடுக்க, வேறு வழியில்லாததால் அந்த போட்டியில் கலந்துகொண்டு பாடினார் எஸ்.பி.பி. ஆனால், எதிர்பார்த்த பரிசு கிடைக்கவில்லை. போட்டியின் நடுவராக இருந்த இசை அமைப்பாளர் கோதண்டபாணி, ‘உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்துவிடுகிறேன்’ என்று உற்சாகப்படுத்தி, எஸ்.பி.பியை நிறைய இசை அமைப்பாளர்களிடம் அழைத்து சென்றார். தனக்காக மற்றவர்களிடம் வாய்ப்பு கேட்ட கோதண்டபாணியை மறக்காத எஸ்.பி.பி., சென்னை வடபழனியில் கட்டிய ரெக்கார்டிங் தியேட்டருக்கு கோதண்டபாணி ஆடியோ ரெக்கார்டிங் தியேட்டர் என்று பெயர் சூட்டினார்.

விருதுகள்

1983ல் தெலுங்கில்  கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ‘சாகர சங்கமம்’ என்ற படத்துக்காக  இளையராஜாவுக்கும், எஸ்.பி.பிக்கும் தேசிய விருது கிடைத்தது. 1988ல்  தெலுங்கில் வெளியான ‘ருத்ரவீணா’ என்ற படத்துக்காக மீண்டும் இருவருக்கும்  தேசிய விருது கிடைத்தது. ‘சங்கராபரணம்’ என்ற படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை  அமைத்தார். எஸ்.பி.பி முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும்,  கேள்விஞானத்தை வைத்து அனைத்து பாடல்களையும் பாடினார். அதற்காக அவருக்கு  தேசிய விருது கிடைத்தது. பிறகு 1981ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன்  நடித்த ‘ஏக் துஜே கே லியே’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்றார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘மின்சார கனவு’ என்ற படத்தில் இடம்பெற்ற  ‘’தங்கத்தாமரை மகளே’’ என்ற பாடலுக்காக, தேசிய விருதை பெற்றார். கன்னடத்தில் அம்சலேகா இசையில் பாடியதற்காகவும் தேசிய விருது  பெற்றுள்ளார்.

போட்டி முடிவை மாற்றியவர்

 தெலுங்கு சங்கம் ஒன்றில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக பரிசு வாங்கியிருந்த எஸ்.பி.பி., 3வது ஆண்டும் வெற்றிபெற்றால் பெரிய வெள்ளிக்கோப்பை பரிசு கிடைக்கும். இந்நிலையில், 3வது ஆண்டு போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ்.பி.பி.யை 2வது பரிசுக்கு தள்ளிவிட்டனர்.  பரிசளிப்பு விழாவுக்கு பிரபல பின்னணி பாடகி தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றிபெற்றவர்களை பாட மேடைக்கு அழைத்தனர். முதல் பரிசு பெற்ற இளைஞர், போட்டியில் பாடிய அதே பாடலை பாடினார். 2வது பரிசு பெற்ற எஸ்.பி.பி தனது பாடலை பாடி முடித்தார். பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் பயங்கர கோபம். அவரே மைக் முன்னால் வந்து, ‘2வது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட நன்றாக பாடினான். எனவே, போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை’ என்று சொல்லி, எஸ்.பி.பிக்கு முதல் பரிசு மற்றும் வெள்ளிக்கோப்பையை வாங்கிக் கொடுத்தார். பிற்காலத்தில் அந்த பாடகியுடன் இணைந்து பல பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. அவர், எஸ்.ஜானகி.

எஸ்.பி.பிக்கு காத்திருந்த எம்ஜிஆர்

அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலை எஸ்.பி.பி பாட முக்கிய காரணம், எம்.ஜி.ஆர். அந்த பாடலை பாட வேண்டிய தினத்தில், கடுமையான காய்ச்சலில் படுத்திருந்தார் எஸ்.பி.பி. இதை ெதரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., உடனே ரெக்கார்டிங்கை ரத்து செய்தார். 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கார் தன்னை அழைக்க வந்தபோது கண் கலங்கிய எஸ்.பி.பி., தன்னை போல் பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம்.ஜி.ஆர் 2 மாதங்கள் வரை காத்திருப்பாரா என்று நம்ப முடியாமல் இருந்தார். ரெக்கார்டிங் முடிந்த பிறகு தன்னை சந்தித்து நன்றி சொன்ன எஸ்.பி.பியை தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘தம்பி... என் படத்துல ஒரு பாட்டு பாடப் போறீங்கன்னு எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லியிருப்பீங்க. உங்களுக்கு பதிலா வேற ஒருத்தரை பாட வெச்சா, அது உங்களுக்கும், உங்க நண்பர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமா இருக்கும். அப்படி செய்ய நான் விரும்பலை. அதனால்தான் உங்களுக்காக இந்த பாட்டு காத்திருந்தது’ என்றார்.

கடைசி பாடல்

ரஜினிக்கு தொடர்ந்து அவரது படங்களில் அறிமுக பாடலை பாடுபவர் எஸ்.பி.பி. பேட்ட, தர்பார் படங்களிலும் ரஜினிக்கு அவர் பாடியிருந்தார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் தனது கடைசி பாடலை எஸ்.பி.பி பாடியிருக்கிறார். இது பற்றி அண்ணாத்த இசையமைப்பாளர் இமான் கூறும்போது, ‘அண்ணாத்த படத்தில் ரஜினிக்கான பாடலை எஸ்.பி.பி பாடியதுதான் அவரது கடைசி பாடல். இதன் மூலம் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதுகிறேன்’ என்றார்.

Related Stories: