புதுடெல்லி: சமீபத்தில் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி,
கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதிலும் தினமும் சுறுசுறுப்பாக செயல்பட்டு
வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட இதுவரை 10க்கும்
மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், ஏராளாமான எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள்,
கட்சித் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதனிடம் சிக்காமல்
மோடி தப்பி வருகிறார். இதற்கான ரகசியம் என்ன என்பதை நேற்று முன்தினம் அவர்
வெளியிட்டார்.
‘ஆரோக்கிய இந்தியா’ இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு
விழாவை முன்னிட்டு, பிரபல விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்பரன்ஸ்
மூலமாக மோடி உரையாடினார்.
அப்போது, மோடியின் உடல் ஆரோக்கியம் பற்றி
பிரபல வீரர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மோடி, ‘சிறுவனாக
இருந்தபோது எனது தாயார் என்னை தினமும் மஞ்சள் சாப்பிடும்படி கூறுவார்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக முருங்கைக்கீரை பரோட்டாவை
செய்து தருவார். இப்போதும் கூட, வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் இதை
சாப்பிடுகிறேன். தற்போதுள்ள சூழ்நிலையில் (கொரோனா), இயற்கை பொருட்கள்
மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக முருங்கைக்கீரை பரோட்டா
பெரிதும் உதவும்,’ என்றார் மோடி. மேலும், இந்த பரோட்டாவை செய்யும்
முறையையும் அவர் விளக்கியுள்ளார். பீகார், மேற்கு வங்கம், ஒரிசா போன்ற
மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சின்னம்மை உள்ளிட்ட நோய்
தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக, முருங்கைக்கீரை பரோட்டா அதிகளவில்
பயன்படுத்தப்படுகிறது.
முருங்கையின் மகிமைமுருங்கைக்காயின்
மகிமை பற்றி சில திரைப்படங்களில் நகைச்சுவை காட்சியாக பல விளக்கங்களை
பார்த்து இருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே முருங்கையில் என்ன அற்புதங்கள்
இருக்கின்றன என்பது பற்றி நிபுணர்கள் அளிக்கும் விளக்கங்கள் இதோ:* முருங்கைக்கீரை, முருங்கைக்காயில் விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்துள்ளன.* இது, சளி, காய்ச்சல் மற்றும் பல தொற்று நோய்களை விரட்டும் வல்லமை கொண்டது. * முருங்கையில் நோய் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. * ஆஸ்துமா, இருமல் மற்றும் சுவாச பிரச்னை அறிகுறிகளையும் விரட்டும்.