வரத்து கால்வாய் என்ற பெயரில் கல்வெட்டு வைத்து குளம் சீரமைத்ததில் மெகா முறைகேடு: அரசு நிதி 39 லட்சம் என்ன ஆனது? கிராம மக்கள் கேள்வி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராம குளக்கரை சீரமைக்க பணி ஒதுக்கிய அரசு அதிகாரிகள் ஒப்பந்ததாரரை கண்காணிக்க தவறியதால்,  வரத்து கால்வாய் என்ற பெயரில் பெயின்ட் அடித்து, கோடு போட்டு கல்வெட்டு வைத்து கணக்கு காட்டியுள்ளனர். இதனால் அரசு நிதி 39 லட்சம்  என்ன ஆனது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழக அரசு குடிமராமத்து பணி திட்டத்தின்கீழ் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, வரத்து கால்வாய்களை சீரமைக்க உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து ஏரிகள், குளங்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாரி சீரமக்கப்படுகின்றன.

இதையொட்டி, காஞ்சிபுரம் ஒன்றியத்தின் 40 ஊராட்சிகளில் உள்ள கிராம குளங்களை, ஊரக வளர்ச்சி முகமை கீழ், நிதி ஒதுக்கி தூர்வரி சீரமைக்கும்  பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கியது. அதன்படி, ஆர்ப்பாக்கம் கிராமம் அரசு பள்ளி அருகே 20 லட்சத்தில் ஒரு குளம், குடியிருப்பு பகுதியில்  19 லட்சத்தில் ஒரு குளம் என தூர்வாரி சீரமைக்க பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், குளங்களை தூர்வாரி வரத்து கால்வாயை சீரமைக்கும் பணி முறையாக நடக்க வில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  மேலும், குளத்தை சுற்றி பெயின்ட் அடித்து, கோடு போட்டுள்ளனர்.

அந்த பணி நிறைவு பெற்றதாக கல்வெட்டு வைத்துள்ளனர். இதை தவிர வேறு  எந்த பணியும் நடக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அரசு அதிகாரிகள் பணி ஒதுக்கீடு செய்து, பணி நடைபெறுவதை முறையாக கண்காணிக்கத் தவறுவதால் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன.  இதனால் அரசு ஒதுக்கிய நிதி என்ன ஆனது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories: