16 மொழிகளில் 45,000 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பி- கடந்து வந்த பாதை!!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை சுருக்கி எஸ்.பி.பி என்று சொல்வதற்கான விளக்கம், ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். இது அவரது முழு பெயர். 1966ல் தனது 20வது வயதில் பாடத் தொடங்கினார். பாடகர் மட்டுமின்றி இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டிருந்தார். அவருக்கு 2001ல் பத்மஸ்ரீ, 2011ல் பத்மபூஷண் ஆகிய விருதுகளை இந்திய அரசு வழங்கியது. இளையராஜா, எஸ்.பி.பி இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால், ஒருவரை ஒருவர் வாடா, போடா என்று செல்லமாக பேசிக்கொள்வார்கள். சைவ உணவை விரும்பி சாப்பிட்ட எஸ்.பி.பி., 5 நிமிடங்களில் சாப்பிட்டு விடுவார். மிகவும் விருப்பமான உணவு, தயிர் சாதம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படுகா, மராட்டி என 16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். தன் குரல் வளத்தை பாதுகாக்க எந்த சிறப்பு கவனமும் மேற்கொள்ளாமல் இருந்தார். குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு உள்பட அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்.

கேளடி கண்மணி படத்தில் மண்ணில் இந்த காதலன்றி என்ற பாடலையும், அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடலையும் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்தினார்.எஸ்.பி.பிக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி, கே.ஜே.யேசுதாஸ். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியை மட்டும் கேட்கவே முடியாது என்று பாராட்டுவார். கர்நாடக இசை கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பியின் தணியாத தாகம். மிகவும் பிடித்த இசை அமைப்பாளர், இளையராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் இசை மீது அதிக மரியாதை இருந்தாலும், ராஜா... எப்பவும் என் ராஜாதான் என்று பாசத்துடன் சொல்வார்.

ஜெயம் ரவி, ஸ்ரேயா நடித்த மழை என்ற படத்துக்காக எஸ்.பி.பி ஒரு பாடலை பாடினார். அவர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து பாடிவிட்டு வெளியேறிய சம்பவம், வெறும் 12 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கும் எஸ்.பி.பியின் ஆர்வத்தை கேள்விப்பட்ட சச்சின், தனது ஆட்டோகிராஃப் போட்ட பேட் ஒன்றை பரிசளித்தார்.

தமிழில் ரஜினிகாந்த், ராதா நடித்த துடிக்கும் கரங்கள் படம் முதற்கொண்டு பல்வேறு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார், எஸ்.பி.பி. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில், முதலில் சிவாஜி கணேசனுக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியவர் எஸ்.பி.பி. இதற்காக பாரதிராஜா எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்துவிட்ட எஸ்.பி.பி., பாட்டு பாடுவதில் தான் இருக்கும் பிசியில், தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

ரஷ்யாவை தவிர எஸ்.பி.பி சென்று வராத நாடுகளே இல்லை. எஸ்.பி.பி ஓவியங்கள் வரைவார். புல்லாங்குழல் வாசிப்பார். எஸ்.பி.பியின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்பம் முதல் இன்றுவரை அவருடனேயே இருக்கிறார். எஸ்.பி.பியின் கால்ஷீட் மற்றும் உணவு, உடல்நலம் ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டது அவர்தான்.

தெலுங்கு படங்களில் சில ராப் பாடல்கள் எழுதியுள்ளார், எஸ்.பி.பி. பாடலாசிரியர்கள் சரியாக அமையாவிட்டால், நீங்களே எழுதிவிடுங்கள் பாலு என்று பல இசை அமைப்பாளர்கள் அவரை வற்புறுத்தியது உண்டு.

கடந்த 30 வருடங்களில் அதிகமான விமான பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமைக்குரியவர், எஸ்.பி.பி. மும்பை, பெங்களூரு, ஐதராபாத் என அடிக்கடி பறந்துள்ளார்.

எஸ்.பி.பியின் இளம் வயதில் மெல்லிசை பாடல் போட்டி ஒன்றில் பாட அவருக்கு தெரியாமலேயே நண்பர் ஒருவர் பெயர் கொடுக்க, வேறு வழியில்லாததால் அந்த போட்டியில் கலந்துகொண்டு பாடினார் எஸ்.பி.பி. ஆனால், எதிர்பார்த்த பரிசு கிடைக்கவில்லை. போட்டியின் நடுவராக இருந்த இசை அமைப்பாளர் கோதண்டபாணி, ‘உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்துவிடுகிறேன்’ என்று உற்சாகப்படுத்தி, எஸ்.பி.பியை நிறைய இசை அமைப்பாளர்களிடம் அழைத்து சென்றார். தனக்காக மற்றவர்களிடம் வாய்ப்பு கேட்ட கோதண்டபாணியை மறக்காத எஸ்.பி.பி., சென்னை வடபழநியில் கட்டிய ரெக்கார்டிங் தியேட்டருக்கு கோதண்டபாணி ஆடியோ ரெக்கார்டிங் தியேட்டர் என்று பெயர் சூட்டினார்.

தெலுங்கு சங்கம் ஒன்றில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக பரிசு வாங்கியிருந்த எஸ்.பி.பி., 3வது ஆண்டும் வெற்றிபெற்றால் பெரிய வெள்ளிக்கோப்பை பரிசு கிடைக்கும். இந்நிலையில், 3வது ஆண்டு போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ்.பி.பி.யை 2வது பரிசுக்கு தள்ளிவிட்டனர். நீதிபதிகளின் முடிவை மனதார ஏற்றுக்கொண்டார், எஸ்.பி.பி. பரிசளிப்பு விழாவுக்கு பிரபல பின்னணி பாடகி தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றிபெற்றவர்களை பாட மேடைக்கு அழைத்தனர். முதல் பரிசு பெற்ற இளைஞர், போட்டியில் பாடிய அதே பாடலை பாடினார். 2வது பரிசு பெற்ற எஸ்.பி.பி தனது பாடலை பாடி முடித்தார். பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் பயங்கர கோபம். அவரே மைக் முன்னால் வந்து, ‘2வது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட நன்றாக பாடினான். எனவே, போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை’ என்று சொல்லி, எஸ்.பி.பிக்கு முதல் பரிசு மற்றும் வெள்ளிக்கோப்பையை வாங்கிக் கொடுத்தார். பிற்காலத்தில் அந்த பாடகியுடன் இணைந்து பல பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. அவர், எஸ்.ஜானகி.

அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலை எஸ்.பி.பி பாட முக்கிய காரணம், எம்.ஜி.ஆர். அந்த பாடலை பாட வேண்டிய தினத்தில், கடுமையான காய்ச்சலில் படுத்திருந்தார் எஸ்.பி.பி. இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., உடனே ரெக்கார்டிங்கை ரத்து செய்தார். இந்த விவரம் தெரியாத எஸ்.பி.பி., தனக்கு பதிலாக வேறொருவர் பாடியிருப்பார் என்று நினைத்தார். 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கார் தன்னை அழைக்க வந்தபோது கண் கலங்கிய எஸ்.பி.பி., தன்னை போல் பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம்.ஜி.ஆர் 2 மாதங்கள் வரை காத்திருப்பாரா என்று நம்ப முடியாமல் இருந்தார். ரெக்கார்டிங் முடிந்த பிறகு தன்னை சந்தித்து நன்றி சொன்ன எஸ்.பி.பியை தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘தம்பி... என் படத்துல ஒரு பாட்டு பாடப் போறீங்கன்னு எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லியிருப்பீங்க. உங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் அடிமைப்பெண் படத்தில் உங்க பாடலை ஆர்வமா எதிர்பார்ப்பாங்க. இந்த நிலமையில் உங்களுக்கு பதிலா வேற ஒருத்தரை பாட வெச்சா, அது உங்களுக்கும், உங்க நண்பர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமா இருக்கும். அப்படி செய்ய நான் விரும்பலை. அதனால்தான் உங்களுக்காக இந்த பாட்டு காத்திருந்தது’ என்றார்.

Related Stories: