10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு: l 50% ஆசிரியர்களுக்கு மட்டும் அனுமதி

* விருப்பத்தின்பேரில் வரும் மாணவர்கள் சந்தேகங்களை கேட்கலாம்

* தமிழக அரசு உத்தரவு

* பள்ளிகளில் 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 2 பிரிவுகளாக பிரிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு பிரிவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

* பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரை மற்றும் தளங்களில் குறிப்பிட்ட அளவில் வட்டம் வரைய வேண்டும்.

* விளையாட்டு போட்டிகள், இறை வணக்க கூட்டம் போன்ற அதிக கூட்டம் சேரும் நிகழ்வுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

* ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், பாடங்கள் குறித்த தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்க வசதியாக  அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.  கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அடுத்த உத்தரவு வரும் வரையில் கல்வி நிறுவனங்கள்  மூடப்பட வேண்டும் என்று மார்ச் மாதம் 25ம் தேதி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசு அவ்வப்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதையடுத்து கல்வி நிறுவனங்கள் 50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணியில் இல்லாதவர்களை கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும், கற்பித்தல் பணிகள் தொடர்பாகவும் செயல்படலாம் என்று கடந்த செப்டம்பர் 21ம் தேதி மத்திய அரசு தெரிவித்து இருந்தது. மேலும், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு பகுதியாக செயல்படுவதற்கும், மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டுப் பெறுவதற்கு வசதியாக சில விதிமுறைகளையும் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசும் அனைத்து வகை பள்ளிகளையும் வழிகாட்டி நெறிமுறைப்படி திறக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இது குறித்து அரசு முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை:

* பள்ளிகளில் 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அவற்றில் நாள் ஒன்றுக்கு ஒரு பிரிவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதாவது, முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் பள்ளிக்கு வரலாம்.  அடுத்த பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வர வேண்டும்.

* ஆசிரியர்களை பொறுத்தவரையில், 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். அவர்களும், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,  முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் (திங்கள் மற்றும் செவ்வாய்) வகுப்பு எடுக்க வேண்டும்.  இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த 2 நாட்களில்(புதன் மற்றும் வியாழன்) பாடம் நடத்த வேண்டும். அதேபோல அடுத்தடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு வந்து பாடம் நடத்த வேண்டும்.

* பள்ளிகளில் 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அவர்கள்

படிக்கும் பள்ளிகளுக்கு தன் விருப்பத்தின் பேரில், ஆசிரியர்களிடம் சந்தேகங்கள் கேட்டுப் பெற பள்ளிக்கு வரலாம். அதுவும், பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் அனுமதித்தால் மட்டுமே அக்டோபர் 1ம் தேதி முதல் வர அனுமதிக்கப்படுவர்.

* இதுதவிர ஆன்லைன் மற்றும் தொலை தூர கல்விமுறை போன்ற வகையிலான கற்பித்தல் பணிகள் தொடரலாம்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்:

* பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பதாக, அவர்களுக்கான நேரம் மற்றும் அட்டவணை குறித்து தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50 சதவீத மாணவர்கள் ஒரு வகுப்பில் நாள் ஒன்றுக்கு அனுமதிக்க வேண்டும்.

* ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையேயான கலந்துரையாடல் என்பது சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும்.

* பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரை மற்றும் தளங்களில் குறிப்பிட்ட அளவில் வட்டம் வரைய வேண்டும். அனைத்து பணி நாட்களிலும் சமூக இடைவெளிக்கான விதிகள் பின்பற்ற வேண்டும்.

* பள்ளிக்கு வெளியில் மாணவர்களை நிற்க வைக்க கூடாது.

* கொரோனா தொற்று மற்றும் கொரோனா சிகி ச்சை மையங்களில் உள்ள மாணவர்கள் பள் ளிக்கு வர வேண்டியிருந்தால், அவர்கள் நல மடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகே வர அனுமதிக்க வேண்டும். அந்த வகை மாணவர்கள் போன் மூலமாகவும் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டு பெறலாம்.

* பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும், பள்ளி வளாகத்தில் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* ஒரு வேளை, பள்ளிக்கு வெளியிடங்களில் மாணவர்கள்- ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடக்க வேண்டியிருந்தால், பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

* விளையாட்டு போட்டிகள், இறை வணக்க கூட்டம் போன்ற அதிக கூட்டம் சேரும் நிகழ்வுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். நீச்சல் குளங்கள் இருந்தால் அவை மூடப்பட வேண்டும்.

* பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன்னதாக, பள்ளிகளில் உள்ள இருக்கைகள், கைப்பிடிச் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு வகை சாதனங்கள் அனைத்தும் சோடியம் ஹைப்போகுளேரைட் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இது ஒவ்வொரு நாளும் பள்ளி திறக்கும் முன்பாக செய்ய வேண்டும்.

* மாணவர்கள் கைகளை கழுவ வசதியாக சோப்பு மற்றும் தண்ணீர், கைகளுக்கான சானிடைசர்கள் வைக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கைகளை கழுவிய பிறகே பள்ளிக்கு நுழைய வேண்டும்.

* அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிகளில் தெரியும்படி பேனர்கள் வைக்க வேண்டும்.

* பயோமெட்ரிக் வருகை பதிவை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் குளிர்சாதன வசதிகளை  தவிர்க்க வேண்டும்.

* ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். எச்சில் துப்புவதையும் தவிர்க்க வேண்டும்.

* இருமுதல், தும்முதல் போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளில் வாய் மற்றும் முகத்தை மறைத்து இருமுவதும், தும்ம வேண்டும். அதற்காக கைகுட்டை, திசுத்தாள்கள், ஒரு முறை பயன்படுத்தும் காகிதங்களை பயன்படுத்த வேண்டும்.

* பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப்பநிலை அறியும் கருவியை கொண்டு சோதிக்க வேண்டும்.

* மாணவ மாணவியருக்கான செய்முறை பயிற்சிகள் சோதனை அறையில் செய்ய வேண்டி இருந்தால், அதிகபட்சமாக ஒரு செய்முறையில் எந்த அளவுக்கு மாணவர்கள் தேவையோ அவர்களை அனுமதித்து, அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அப்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். அந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அவர் இருந்த பகுதி அல்லது வளாகத்தை உடனடியாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

Related Stories: