சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.எஸ்.விஜயகுமார் (50). இவர், பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மட்டுமல்லாமல், கட்சி வழங்கிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் விஜயகுமார் எம்எல்ஏ, இதுவரை 8 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. சட்டசபை கூட்டத்தொடருக்கு சென்றபோதும் கொரோனா தொற்று இல்லை.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 9வது முறையாக கொரோனா பரிசோதனை செய்ததில், விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான சளித்தொல்லை மட்டுமே இருப்பதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.