கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்கக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்

சென்னை: மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக்குழுவை கலைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவில் தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் யாரும் இடம்பெறவில்லை. மேலும், கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் சேர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், கலாச்சார ஆய்வு தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 எம்.பிக்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.  அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்துருவில் அளித்த பதிலில், இந்தியாவின் கலாச்சார தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12,000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நமது நாடு பன்மைத்துவ கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட பெருமை மிக்க மரபு வழியைக் கொண்டதாகும்.

ஆகவே, அதன் ஆய்வுக்கு இம்மாபெரும் நாட்டின் பன்முக கலாச்சாரங்கள் குறித்த ஆழமான உட்பொருள்கள் இயல்பாகவே தேவைப்படுகின்றன.

நாங்கள் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைவது என்னவெனில், இத்தகைய பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழுவில் தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக் குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்திய சமூகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே.

தென்னிந்திய மொழிகளின், பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட, ஆய்வாளர்கள் யாரும் அக் குழுவில் இல்லை. அக்குழுவின் உள்ளடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா? பாலின பார்வையற்ற, தனித்துவமிக்க பன் தேசிய இனங்கள், பல்வேறு சமூகக் குழுக்களைப் புறம் தள்ளியுள்ள இக்குழுவின் உள்ளடக்கம் இது அமைக்கப்பட்டுள்ள நோக்கம் குறித்த ஐயங்களையே எழுப்புகிறது.

மிகச் சிறந்த ஆய்வாளர்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சாட்டர்ஜி, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இத் துறைக்கு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். இந்த நேர்மறையான பங்களிப்புகளையெல்லாம் இக்குழு சிதைத்துவிடுமோ என அஞ்சுகிறோம். இத்தகைய உள்ளடக்கம் கொண்ட இக் குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது. மேலும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும் எனக் கருதுகிறோம். இப்பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக்குழுவை கலைக்க அறிவுறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: