செய்யூர்: செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி முன்னாள் அதிமுக துணை தலைவர் அரசு (எ) ராமச்சந்திரன், கடந்த 19ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கூலிப்படை தலைவன் புதுச்சேரி கரவாடிகுப்பத்தை சேர்ந்த ஸ்ரீதர் (40), கடந்த 22ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், சந்தேகத்தின்பேரில் இடைக்கழிநாடு மாரிமுத்து (35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், மாரிமுத்து அதே பகுதியை சேர்ந்த நில தரகர் விக்னேஷ் (31) ஆகியோர் நண்பர்கள். விக்னேஷ் நிலம் விற்பனை தொடர்பாக ராமச்சந்திரனிடம் இருந்து ரூ.45 லட்சம் வாங்கி, அதை சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.