புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 81.55 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 86,508 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 1129 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 91,149 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 46,74,987 பேர் குணமடைந்துள்ளனர். இது, 81.55 சதவீதமாகும். உயிரிழப்பு சதவீதமானது 1.59 சதவீதமாக குறைந்துள்ளது. இன்னும், 9,66,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, நாடு முழுவதும் 6,74,36,031 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 11,56,569 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.