கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடம்: துணை முதல்வர் அலுவலகம் தகவல்.!!!

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டெல்லி துணை முதல்வர்  மனீஷ் சிசோடியாவுக்கு கடந்த 14-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இணை நோய்கள் எதுவும் இல்லாமல் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு  வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள டெல்லியில் அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும் வீட்டுத்தனிமையில் இருந்து தேவையான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், நேற்று காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, மனிஷ்  சிசோடியா உடனடியாக டெல்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் இருந்து சாகேத்தின் மேக்ஸ் மருத்துவமனைக்கு  மாற்றப்படுகிறார்.

Related Stories: