மேட்டூர் அணை நீர்மட்டம் 98 அடியை தாண்டியது: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45,000 கனஅடியாக சரிவு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 45ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 98 அடியை தாண்டி உள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 அணைகளில் இருந்தும் காவிரியில் சுமார் 75ஆயிரம் கனஅடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 75ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து 1500, கிருஷ்ணராஜசாகர் அணையில்  இருந்து 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால்  ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை 70 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று45 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை 70 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 49 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. வரத்தை விட நீர்திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று 96.87 அடியாக இருந்த நீர்மட்டம் 98.20 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் நீர்மட்டம் 8.43 அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 18,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 62.53 டி.எம்.சி.

Related Stories: