சவுதியில் சட்ட விரோதமாக தங்கிய 231 இந்தியர்கள் மீட்பு: பல்லாவரம் ராணுவ முகாமில் அடைப்பு

மீனம்பாக்கம்: சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கிய இந்தியர்களை அந்நாட்டு அரசு பிடித்து, அங்குள்ள முகாம்களில் வைத்திருந்தது. அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டு அரசுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முகாம்களில் இருந்த 231 இந்தியர்களுக்கும், இந்திய தூதரகம் எமர்ஜென்சி சான்றிதழ் வழங்கியது. பின்னர் அவர்கள், ரியாத்தில் இருந்து சவுதி அரேபியன் சிறப்பு தனி விமானத்தில் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள். அனைவரும் ஆண்கள். ஏஜென்ட்களை நம்பி சுற்றுலா விசாவில் சென்று சட்ட விரோதமாக தங்கியவர்கள், போலி பாஸ்போர்ட்களில் சென்றவர்கள், பாஸ்போர்ட்களை தவறவிட்டவர்கள், விசா காலாவதியான பின்பும் தங்கியுள்ளவர்கள் என பலதரப்பினரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் குடியுரிமை சோதனை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொருவரிடமும் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர், சென்னை விமான நிலையத்திலேயே கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து அனைவரும் இன்று அதிகாலை சிறப்பு தனி பஸ்களில் ஏற்றப்பட்டு பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாமுற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்படுகின்றனர். பின்னர் குற்ற பின்னணி இல்லாதவர்கள் விடுவிக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுவர். குற்றப்பின்னணி உடையவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்படுவர் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: