×

ஹாப்பி நியூஸ்!: நோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத மாவட்டமாக உருவானது சென்னை.. மாநகராட்சி அதிகாரிகள் தகவல்..!!

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் ஏதும் இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளதாகவும் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத மாவட்டமாக சென்னை உருவானதாக மாநகராட்சி தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதிக்க துவங்கியது. அதன்படி மே மாதங்களில் அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டன. அக்காலகட்டத்தில் சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 1400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டு வந்தது.

பின்னர், ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முழுமையாக அப்பகுதியை கட்டுப்படுத்தாமல் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் குறிப்பிட்ட வீட்டை மட்டும் கட்டுப்படுத்துவது என்ற நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதேபோல ஒரு பகுதியில் புதியதாக 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டால் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டன. விதிமுறைகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட பின்னர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை சென்னையில் படிப்படியாக குறைய தொடங்கியது. ஜூன் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைய தொடங்கியது. இந்த சூழலில் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைந்து தற்போது நோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளது. தினமும் 400 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : district ,Chennai ,Corporation officials , Disease Control Area, District, Chennai, Corporation
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில்...