லண்டன்: கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முதல்கட்ட முயற்சியில் இங்கிலாந்து இறங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 9 லட்சத்து 72,100 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா பலியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 90,020 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி, ரஷ்ய விஞ்ஞானிகள் என பல தரப்புகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யா, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும் அதை சோதனை செய்து பார்க்கவும் முடிவு செய்துள்ளது.