×

வேளாண் மசோதா விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்டவிதம் ஜனநாயகத்திற்கு எதிரானது..மாயாவதி கருத்து..!!

லக்னோ: வேளாண் மசோதா விவாகத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்டவிதம் ஜனநாயகத்திற்கு எதிரானது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறையான வாக்கெடுப்புகளை நடத்தி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், சபை விதிமுறை புத்தகங்களை கிழித்தெறிந்தும், மசோதா நகல்களை எரித்தும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜிவ் சவ்தாவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இந்த முடிவை எதிர்த்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடியவிடிய தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என நடந்து கொண்டவிதம் மோசமானது என மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி, ஜனநாயகத்தின் கோவிலாக விளங்கும் நாடாளுமன்றத்தில் அரசு செயல்பட்ட விதமும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதமும், அரசியல் சாசன மற்றும் ஜனநாயகத்தின் கண்ணியத்தை குலைக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல் எனவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.


Tags : parliament ,Opposition ,MPs ,Mayawati , Agriculture Bill, Parliament, MPs, Democracy, Opposition, Mayawati
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...