கஞ்சா பழக்கத்தை கைவிட கூறிய பிளஸ் 2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை

திருப்பூர்: கஞ்சா பழக்கத்தை கைவிடுமாறு கூறிய பிளஸ் 2 மாணவியை தனியாக அழைத்து சென்று கத்தியால் குத்திய விட்டு தப்பிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வெள்ளம்படிபகுதியை சேர்தவர் மணி (19). இவர், திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது, அவருக்கும் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்நிலையில், மணிக்கு கஞ்சா பழக்கம் இருப்பது மாணவிக்கு தெரியவந்தது. இதனால், மணியிடம் பேசுவதை மாணவி குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியிடம், மணி தனியாக சந்தித்து பேச வேண்டும் என கூறி உள்ளார். இரவு 7 மணிக்கு மணி, இரு சக்கர வாகனத்தில் மாணவியை அழைத்து கொண்டு வஞ்சிபாளையம் பாலம் அருகே உள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.

அப்போது மாணவி, மணியிடம் உனக்கு கஞ்சா பழக்கம் இருப்பதால் காதலை கைவிடுமாறு கூறினார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த மணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தி, அவர் மீது கல்லை போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இரவு முழுவதும் மயங்கி கிடந்த மாணவி காலை வீட்டிற்கு நடந்தே வந்தார். அந்த மாணவியை உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணியை தேடி வருகின்றனர்.

Related Stories: