×

பேரவைக்குள் குட்காவை எடுத்து சென்ற விவகாரம் : 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க., எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் புகையிலைபொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் 2017ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் அவற்றை பேரவைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர். இதையடுத்து, சபாநாயகர் உத்தரவுபடி எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் 2 எம்எல்ஏக்கள் இறந்தனர். ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிமை மீறல் குழுவின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு தி.மு.க., எம்எல்ஏக்களுக்கு 2வது முறையாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குட்கா விவகாரத்தில் 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் சபாநாயகர், சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அக்.28ம் தேதிக்குள் பதில் தரவும் உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது நோட்டீசுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Assembly ,MK Stalin , Assembly, Gutka, Infringement, Notice, MK Stalin, Interim Prohibition
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...