நாகர்கோவில்: தமிழக பா.ஜ. தலைவர் முருகன் கடந்த 21ம் தேதி குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான முப்பந்தலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தக்கலை அருகே பருத்திக்காட்டுவிளையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறி சமூக இடைவெளி இல்லாமல் திரண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திலும், நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக தக்கலை காவல் நிலையத்திலும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ. மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி, மாநில பொது செயலாளர் உமாரதி உள்ளிட்ட 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.