காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விவசாயிகள் போராட்டத்துக்காக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை: கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை்: வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 24ம் தேதி முதல் நாடு தழுவிய தொடர் போராட்டங்களை காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் இன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வருகிறார். அவருக்கு தமிழக  காங்கிரஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் சத்தியமூர்த்தி பவனில் மாலை 3 மணிக்கு தமிழக காங்கிரசின் முன்னணி அமைப்புகள் மற்றும் இதர துறைகள் தலைவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்கள், சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை சந்திக்கிறார்.

செப்டம்பர் 25ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்,  மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரை சந்திக்கிறார்.  மாலை 3.30 மணியளவில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்திக்கிறார்.

விவசாயிகள் ஆதரவு போராட்டத்திற்கான செயல் திட்டங்களை வகுப்பதற்காகவும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காகவும் தினேஷ் குண்டு ராவ் வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: