நெல்லை: பத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சேரன்மகாதேவி அருகே பத்தமடையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. பத்தமடையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் பாதையில் கன்னடியன் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் சீரமைக்கப்படாத காரணத்தால் தற்போது பக்கவாட்டு சுவர்கள் உடைந்து, இடிந்து விழும் தருவாயில் உள்ளன.
பாலத்தில் இருமருங்கிலும் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன. இந்நிலையில் கால்வாய் மற்றும் ஆறுகளுக்கு குளிக்க செல்வோர் பாலத்தை அச்சத்தோடு கடந்து செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்தனர். எனவே அப்பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.