வாஷிங்டன்: சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி பேஸ்புக் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என கூறியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை உடைய நாடாக சீனா இருந்தபோதும், ஊடகங்களின் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்தவில்லை என கூறியது. பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கப்படும் கிரேட் பயர் வால் ஆப் சீனா என்ற மென்பொருள் மூலம் பல்வேறு இணையதளங்களை சீன அரசு தடை செய்து வைத்துள்ளது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் சில தளர்வுகளை சீனா அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் குறித்தும் அதன் வேட்பாளர்கள் குறித்தும் ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகளை சீனாவிலிருந்து இயங்கும் போலிக் கணக்குகளில் வெளியானது. இதைதைத் தொடர்ந்து அவை தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், போலிக் கணக்குகள் தொடர்பாக, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளைக் கவனமாகக் கண்காணித்து வருகிறோம் என கூறியுள்ளது. தற்போது விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்ட 155 பேஸ்புக் கணக்குகள், 9 குழுக்கள், ஆறு இன்ஸ்டாகிராம் பக்கங்களை நீக்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது. இதில் 150 பேஸ்புக் கணக்குகள் சீனாவைச் சேர்ந்தவை என கூறியது. இவை அமெரிக்கத் தேர்தல் பற்றிய தகவல்களைப் பதிவேற்றிக் கொண்டிருந்தன என்று தெரிவித்துள்ளது.