டெல்லி :டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களாக உள்ளவர்களின் பட்டிலை வெளியிட்டு வருகிறது. இதன்படி 2020-ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க டாப் 100 நபர்கள் பட்டியலை இன்று புதன்கிழமை டைம்ஸ் இதழ் வெளியிட்டது. செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே இடம்பெற்றுள்ளார். கலைஞர்கள் பிரிவில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம்பெற்றுள்ளார்.
மேலும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர் பில்கிஸ், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பேராசிரியர் ரவீந்திர குப்தா ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்த பெண்களில் ஒருவர் பில்கிஸ் ஆவார். இவருக்கு வயது 82 ஆகும். உலகில் முதல்முறையாக லண்டனைச் சேர்ந்த எச்ஐவி நோயாளியை குணப்படுத்திய பேராசிரியர் ரவீந்திர குப்தாவும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; சீன அதிபர் ஜி ஜின்பிங்; 2020 அமெரிக்க தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன்; 2020 அமெரிக்க தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ்; தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்; ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல மற்றும் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி ஃபாசி,நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெய் ஆகியோரும் உலகின் செல்வாக்கு மிக்க டாப் 100 நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். டைம் பத்திரிகையின் ‘மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்’ பட்டியலில் பிரதமர் மோடி 4 முறை இடம்பெற்றுள்ளார். அவரது பெயர் 2014, 2015, 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது.