வருசநாடு: மயிலாடும்பாறை அருகே, குடிமகன்களின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே, தங்கம்மாள்புரம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கொட்டை முந்திரி மற்றும் இலவம் பஞ்சு பதப்படுத்தும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அரசால் கட்டப்பட்டது. கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது இலவம்பஞ்சு, கொட்டை முந்திரியை இந்த விற்பனைக் கூடத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர்.
ஆனால், 6 மாதம் மட்டுமே செயல்பாட்டில் இருந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பின்னர், குடிமகன்களின் கூடாரமாக மாறியது. இதனால், விவசாயிகள் தங்களது இலவம் பஞ்சு மற்றும் கொட்டை முந்திரியை தனியார் குடோன்களில் இருப்பு வைக்கின்றனர்.
இதனால், அரசுக்கு சொந்தமான பதப்படுத்தும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வீணாகி வருகிறது. எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தங்கம்மாள்புரம் பெண்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.