×

உடன்குடி அருகே தோட்டத்தில் கட்டி வைத்து அக்கா, தம்பி மீது தாக்குதல்

உடன்குடி: உடன்குடி அருகே தோட்டத்தில் கட்டி வைத்து அக்கா, தம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடன்குடி அருகேயுள்ள மாதவன்குறிச்சியை சேர்ந்தவர் கணேசப்பாண்டி. டிவி மெக்கானிக். இவருக்கு 6ம் வகுப்பு படிக்கும் மகன், 8ம் வகுப்பு படித்துவரும் மகள் என இருகுழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் ஆறுமுகப்பாண்டி என்பவரது 24வயது மகள் வசித்து வருகிறார். நேற்று கணேசபாண்டியின் மகன், மகள் இருவரும் வளர்த்து வந்த நாய்க்குட்டி திடீரென காணாமல் போனது. பல்வேறு இடங்களில் தேடிய அவர்கள் இருவரும், இளம்பெண் வசித்து வரும் தோட்டம் பகுதியில் சென்றுள்ளனர். அப்போது இளம்பெண், நாய்க்குட்டி இங்கே தான் உள்ளது என கூறி சிறுவனை அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து சிறுவனை தாக்கியுள்ளார்.

தம்பியின் அலறல் சத்தம் கேட்டு அவனது அக்கா உள்ளே சென்று பார்க்கும் போது கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளார். தம்பியை அவிழ்க்க முயலும் போது சிறுமியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி அவரையும் கட்டி வைத்து சுத்தியலால் தாக்கியும், நாய்க்குட்டியை விட்டு கடிக்கவும் விட்டுள்ளார் அந்த இளம்பெண். இதனையடுத்து சிறுவனும், சிறுமியும் அலறி துடித்துள்ளனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் திரண்டு வந்த பொதுமக்கள் சிறுவன், சிறுமி இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் யாரையும் இளம் பெண் உள்ளே அனுமதிக்காத நிலையில் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், தோட்டத்திற்குள் புகுந்து இருவரையும் மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : sister ,brother ,Udankudi ,garden , Udankudi, sister, brother, attack
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா