'எந்த நாட்டுடனும் சண்டையிட சீனாவுக்கு எண்ணமில்லை' : ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் சீன அதிபர் பேச்சு

நியூயார்க் : சீனா, எந்த நாட்டுடனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ சண்டையிடும் எண்ணம் இல்லை என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு துவங்கி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்காக இந்த ஆண்டு இன்று முதல் வரும் 29ம் தேதி வரை ஐநா பொது சபையில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாத நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் பல்வேறு தலைவர்கள் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில்,  ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங், உலகில் மிக பெரிய வளர்ந்து வரும் நாடாக சீனா உள்ளது. அமைதி, வெளிப்படை தன்மை, ஒத்துழைப்பு மற்றும் பொது வளர்ச்சிக்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.நாட்டை விரிவாக்கவோ, மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தவோ நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. எந்த ஒரு நாட்டுடனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ சண்டையிடும் எண்ணம் இல்லை. மற்ற நாடுகளுடனான வேற்றுமைகள் மற்றும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை வழியே சுமூக தீர்வு காணும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.

அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் உலகின் மிகப்பெரிய வளரும் நாடான சீனா ஒருபோதும் மேலாதிக்கம் செலுத்தாது.கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும்,என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

Related Stories: