×

வேளாண் பாதுகாப்பு சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

மதுரை: ராமநாதபுரம் ஆய்வுக்கூட்டத்தை முடித்து விட்டு சென்னை புறப்பட நேற்று மாலை மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பே ட்டி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்  பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறது. நானும் ஒரு விவசாயிதான். விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் எனக்கும் தெரியும். விவசாயிகளுக்கு நன்மை  செய்யும் அனைத்து திட்டத்துக்கும் அதிமுக அரசு ஆதரவளிக்கும். இது 3 சட்டங்களாக நிறைவேறியுள்ளது. தமிழக அரசின் கீழ் ஏற்கனவே இயங்கி வரும் வேளாண் விற்பனைக்கூட சட்டத்தை ஒட்டியே உள்ளது. இச்சட்டம் மூலம் உணவு பொருட்களின் தரம், உணவு பதப்படுத்துதல்  போன்றவை மேம்படும். விவசாயிகளுக்கு நன்மை தரும் திட்டங்களை அதிமுக ஆதரிக்கும். நன்மையில்லாத திட்டங்களை எதிர்க்கும். இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பாஜ தலைவர் கோட்டையில் பாஜ கொடி பறக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். அதிமுக அரசுதான் நிரந்தரமாக இருக்கும் என்றார்.

* காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் ஜனவரியில் துவங்கும்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, பாஸ்கரன், கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
2021, ஜனவரியில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடியில் துவக்கப்படும். இத்திட்டம் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். காவிரி முதல் தெற்கு வெள்ளாறு, தெற்கு வெள்ளாறு முதல் வைகை ஆறு, வைகை ஆறு முதல் குண்டாறு என பிரிக்கப்பட்டு கால்வாய்கள் அமைக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும். விவசாயம் செழிக்கும். கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன்பெறும். 2018-19 ல் பயிர்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு பெறாத 116 கிராம மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமேஸ்வரத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் காவலர் ஓய்வு விடுதி கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : government ,Edappadi Palanisamy ,AIADMK , Why did the AIADMK government support the Agricultural Security Act? Chief Minister Edappadi Palanisamy's explanation
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...