பள்ளிப்பட்டு: ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து
வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணை முழு
கொள்ளளவு எட்டியுள்ளதால், உபர்நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த
இரண்டு வாரங்களில் 4 முறை நீர்தேக்க அணையிலிருந்து உபரிநீர் கொசஸ்தலை
ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு
அணையிலிருந்து 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், பள்ளிப்பட்டு
அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,
பள்ளிப்பட்டு தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய் துறையினர் கரையோர
கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டு
வருகின்றனர். மேலும், சொரக்காய்பேட்டை, நெடியம், சாமன்தவாடா ஆகிய
பகுதிகளுக்கு இடையில் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்கள் நிரம்பி வெள்ளம்
பெருக்கெடுத்து ஒடுவதால் கரையோர கிராமங்களுக்கு போக்குவரத்து
துண்டிக்கப்பட்டுள்ளது.
* கலெக்டர் எச்சரிக்கை
கலெக்டர் மகேஸ்வரி
ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து
நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது, வினாடிக்கு 732 அடி கன அடி வீதம் நீர்
வந்து கொண்டிருப்பதால் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் யாரும்
பூண்டி-கண்டலேறு நீர்வரத்து கால்வாயில் குளித்தல், பார்வையிடல்,
விளையாடுதல், துணி துவைத்தல் மற்றும் செல்போன்களில் செல்பி எடுத்தல்
உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடப்படுகிறது. இவ்வாறு
அதில் கூறியுள்ளார்.