×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி


* ரவையை மாவாக்கி அதில் வெல்லப்பாகு விட்டு தேங்காய்த்துருவலை சேர்த்து பிசைந்து கொழுக்கட்டையாக செய்து வேகவைத்து  எடுத்தால் ருசியுள்ள கொழுக்கட்டை தயார்.

*சுண்டல் செய்த பிறகு அதன் மேல் காராபூந்தியை தூவி சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

*தேன்குழல் செய்யும்போது உருளைக் கிழங்கை வேகவைத்துச் சேர்த்தால் சுவையும் மொறுமொறுப்பும் கூடும்.

* முறுக்கு செய்யும்போது கடலை மாவைக் குறைத்து பொட்டுக்கடலை மாவைச் சேர்த்தால் முறுக்கு கூடுதல் மொறுமொறுப்புடன்  இருக்கும்.

* முறுக்குக்கு திரித்த மாவு என்றால் மொத்தமாகப் பிசையாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிசைந்து செய்தால் மாவும் உலராது. முறுக்கும்  கருக்காது.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* சூடான கேக்கை கத்தியினால்  நறுக்கினால் நீட்டாக வில்லைகள் போட வராது. ஒரு மெல்லிய நூலால் அறுத்தால் அழகாக துண்டங்கள்  விழும்.
- வத்சலா சதாசிவன், சிட்லப்பாக்கம்.

*நான்ஸ்டிக் தோசைக்கல்லை ஒரு போதும் நேரடியாக அடுப்பில் சூடு செய்யக்கூடாது. அப்படி செய்தால் நான்ஸ்டிக் கோட்டிங் சீக்கிரமாக  போய் விடும். உடலுக்கும் கெடுதல், சிறிது எண்ணெய்த் தடவிதான் சூடாக்க வேண்டும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

*ஜவ்வரிசியை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு அடை, வடை, தோசை செய்யும் போது சிறிது ஜவ்வரிசி மாவையும் சேர்த்துச்  செய்தால் மொறு மொறுவென்று இருக்கும்.

*உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாைவத் தூள் செய்து போட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

* அப்பளம் பொரிக்கப் போகிறீர்களா? பொரித்து முடித்ததும் சூட்டோடு சூடாக சிறிது எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து அதன் ஓரங்களை  அழுத்தி விடுங்கள். சூடு ஆறிய பிறகு பார்த்தால் அப்பளம் அந்தப் பாத்திரத்தின் வடிவில் பார்ப்பதற்கு புதுமையாக காட்சியளிக்கும்.

* டேபிள் சால்ட் கெட்டியாக பாறை போல் உலர்ந்து விடாமல் தடுக்க ஒரு சிட்டிகை பச்சரிசியை அதில் போட்டு குலுக்கி வைக்கலாம்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

*பலா இலையை உபயோகித்து இட்லி, இடியாப்பம் போன்றவை செய்தால் புது வாசனையுடன் சுவையான பலகாரம் ரெடி.

*கீரை மற்றும் வெஜிடபிள் கட்லெட் செய்யும்போது சிறிதளவு சாதத்தை நன்கு மசித்து சேர்த்துப் பிசைந்து உருட்டி கட்லெட் செய்து  பாருங்கள். கட்லெட் மிருதுவாகவும், நன்றாகவும் இருக்கும்.


- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!