சிலை கடத்தல் வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமீன் கோரி மனு: தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ஜாமீன் கோரிய வழக்கில் தமிழக சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த சுபாஷ் சந்ர கபூர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வாழ் குடியுரிமை பெற்றுள்ளதாகவும், கடந்த 2008ம் ஆண்டு தான் நடத்திய சிலை கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 20க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகளை வைக்கப்பட்டதாக  தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலை கடத்தல் தொடர்பாக தன் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர். சொந்த வேலை காரணமாக ஜெர்மனி சென்றிருந்த போது 2011ல் ஜெர்மனி காவல்துறையினர் என்னை கைது செய்து, 2012 ஆம் ஆண்டு இந்திய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, இந்த வழக்கில் இதுவரை 30 சாட்சியங்களை தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்துள்ளதாகவும், தன் மீது நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 71 வயதாகும் தனக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சுபாஷ் சந்ர கபூர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு தன்னை தவிர பிற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம், மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு சம்பந்தமாக தமிழ்நாடு சிலை தடுப்பு மற்றும் கடத்தல் பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகின்ற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

Related Stories: