×

கொரோனா பாதிப்பு எதிரொலி: போதிய வருமானம் இல்லாததால் மேலும் 28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய லுப்தான்சா ஏர்லைன்ஸ் திட்டம்..!!


பெர்லின்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போதிய வருமானம் இல்லாததால் ஏற்கனவே 22,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் மேலும் 28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனையடுத்து செலவினங்களை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெர்மனியை தலைமை இடமாக கொண்ட லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனமும், ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 38 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வருமானமின்றி தவித்த லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம், நிலைமையை சமாளிக்க ஜெர்மனி அரசிடம் இருந்து 9 மில்லியன் யூரோப்களை பிணை தொகையாக பெற்றிருந்தது.

அந்த தொகை கடந்த சில மாதங்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளம், கடன் செலுத்தியது, பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும் நிதிச்சுமை காரணமாக கடந்த ஜூன் மாதமே 22,000 ஊழியர்களை லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. ஆனால் தொடர்ந்து, உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தொடங்கப்படாமல் இருப்பதால் நிதிச்சுமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையில் நிலைமையை சமாளிக்க தனது ஊழியர்களில் மேலும் 28,000 பேரை பணிநீக்கம் செய்ய லுப்தான்சா ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் பட்சத்தில், லுப்தான்சா நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரும். லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் அந்நிறுவன ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Corona ,Lufthansa Airlines , Corona vulnerability, income, 28,000 employees, layoffs, Lufthansa Airlines
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...