×

இந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் மறுப்பு : வங்கி மேலாளருக்கு நோட்டீஸ்; ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அடுத்த யுத்தப்பள்ளம் கிராமமாகும்.இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில்  சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 15 வருடங்களாக கணக்கு வைத்து வாடிக்கையாளராக உள்ளார்.

 இந்நிலையில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு தனது நண்பருடன் சென்றுள்ளார்.  வங்கியில் தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் பட்டேல்  என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டு உள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், உங்களுக்கு இந்தி தெரியுமா என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் எனக்கு இந்தி தெரியாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதற்கு வங்கி மேலாளர்,  நான் மகாராஷ்டிராவை சேர்ந்தவன். இந்தி ெதரியும். இது மொழி பிரச்னை என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவணங்களை காண்பித்து உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும், வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது எனக்கூறி பாலசுப்பிரமணியனை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு திரும்பி வந்த மருத்துவர், மொழி பிரச்னை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு, மான நஷ்ட ஈடு கேட்டு கடந்த 12ம் தேதி  வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார். மேலும் நீதி மன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற ராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் இந்தி தெரியாது என்பதால் கடன் கிடையாது என வங்கி மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக பாலசுப்பிரமணியன் வருத்ததுடன் தெரிவித்தார்.

Tags : doctor ,bank manager ,Jayangondam , Do not know Hindi, loan, denial, bank manager, notice, Jayangondam
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...