புதுடெல்லி: பீகாரில் ரூ.14,258 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பீகார் மாநிலத்தில் அடுத்த மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பீகாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலத்தில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் வீடியோகான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி 14,258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சுமார் 350 கி.மீ. நீளத்திற்கு இந்த சாலைகள் அமைக்கப்படவுள்ளது. மேலும் பீகார் மாநிலத்தில் 45,945 கிராமங்கள் இன்டர்நெட் வசதி பெறும் வகையில் இன்டர்நெட் சேவைக்கான ஆப்டிக்கல் பைபர் பொருத்தும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, “ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின்படி, கிராமங்களை முக்கிய இடங்களாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது இன்று பீகாரில் இருந்து தொடங்குகின்றது” என்றார்.