சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் பரபரப்பு
கோலார்: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உடல் நலமின்றி அவதிப்பட்டு வரும் தனது தந்தையை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளு வண்டியில் இழுத்து சென்ற மகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது. கர்நாடகாவின் கோலார் மாவட்டம், சீனிவாஸ்பூர் தாலுகா, கே. பாதூரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (55). காய்கறி, பழங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கிருஷ்ணப்பாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் வியாபாரத்திற்கு சென்றார். இதனால், காயம் புரையோடிப் போய் காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நடக்க முடியாமல் கிருஷ்ணப்பா அவதிப்பட்டு வந்தார். இவரது மகன் மது (14) தந்தை படும் அவதியை பார்த்து வேதனை அடைந்தான், மேலும், தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தும் வரவில்லை. இந்நிலையில், நேற்று தந்ைத கிருஷ்ணப்பா வலியால் துடித்துள்ளார். மது, தந்தையை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தான். இதற்காக ஒரு தள்ளு வண்டியை ஏற்பாடு செய்து அதில் தனது தந்ைதயை உட்காரவைத்து இழுத்துக்கொண்டே 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனையை நோக்கி சென்றான்.
இதை பார்த்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். ஒரு வழியாக கே. பாதூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள அட்டகல் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு தந்தையை தள்ளு வண்டியிலேயே இழுத்துச் சென்று மகன் சிகிச்சை அளிக்கச் செய்தான். சிகிச்சை முடிந்ததும் அதே தள்ளுவண்டியில் தனது தந்தையை உட்கார வைத்து இழுத்துக்கொண்டு வந்தான். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.