×

வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை: விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வருகிற 28ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து  கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி, தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில்  முன்னாள் எம்பி அப்துல் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., திராவிடர் கழக பொருளாளர் வி.குமரேசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி  பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல்-குரல் வாக்கெடுப்பு என்றபெயரில் ‘சர்வாதிகார’மாக மத்திய பாஜ அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் தொடர்பான சட்டங்கள், “உணவுப் பொருள்களான வேளாண் விளை பொருட்களை வரம்பின்றிப் பதுக்கி” வைக்கும் சமூகவிரோத செயலுக்கு வழி செய்கிறது. “விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் அத்தியாவசிய சட்டத்தை”, சீர்குலைக்கும் புதிய திருத்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து”; பதுக்குதல்  தாராளமயமாக்கப்படுகிறது. “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்” மூலம் “கார்ப்பரேட் - ஏழை விவசாயி” என்ற சமன்பாடற்ற, ஓர்  “ஒப்பந்த வணிகம்”  திணிக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும் கேடு  ஏற்படுத்தப்படுகிறது.

‘‘விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தினை”த் திணித்து, “மாநிலத்திற்குள்ளான வணிகம் மற்றும் வர்த்தகமும்” பறிக்கப்படுகின்றன.மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள; விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் - வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும்-கூட்டாட்சித்  தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களுக்கும், தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் தனது கடுமையான  எதிர்ப்பைப் பதிவு செய்கிறது.

மேலும், மாநிலங்களவையின் விதிகளை மீறி நிறைவேற்றியிருக்கும் இந்த சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும்  மத்திய பாஜக அரசுக்கும்-அவற்றை ஆதரித்திருக்கும் மாநில அதிமுக அரசுக்கும்,  இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தை  தெரிவித்துக் கொள்கிறது.
“அத்தியாவசியத் திருத்தச் சட்டம் மூலம் “சுதந்திரமான வேளாண் சந்தையில்” குறுக்கிட்டு, அதன் இயல்பான போக்கைப் பாதித்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச விலை கூட கேள்விக்குறியாகும் சூழல்  உருவாகும்.
“விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)சட்டம் குறு-சிறு-நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாமல், பெரும் விவசாயிகளுக்கேகூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று இக்கூட்டம் கருதுகிறது.
“விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின்” மூலம் மாநிலத்தில் உள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள், உழவர் சந்தைகள் போன்றவற்றை அறவே ஒழிக்கும்  நடைமுறைகள் ஆகும்.
 
“வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தப்படுதலை ஒழுங்குபடுத்தும் மாநில அரசின் சட்டங்கள் மேற்கண்ட சட்டத்தைக் கட்டுப்படுத்தாது”, “ஒரு குக்கிராமத்தில் உள்ள விவசாய சந்தை நிலவரம் குறித்து மத்திய அரசு தெரிவிக்கும் முறை”  என்பது, மாநிலங்களின் கையில் உள்ள பட்டியல் 14, 15, 16 மற்றும் 18 - மாநிலத்திற்குள் நடக்கும் வர்த்தகம், வணிகம் (பட்டியல் 26) போன்ற அதிகாரங்களையும் மத்திய அரசே கைப்பற்றிக் கொள்ளும் மேலாதிக்கப் போக்கு என்றே  இந்தக்  கூட்டம் கருதுகிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’ திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பா.ஜ.க., அதிமுக அரசுகள் - இந்த சட்டங்களின்  மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது   வெளிப்படையாகவே தெரிய வருகிறது.  

“விவசாயம் சம்பந்தமான இந்த மூன்று சட்டங்களும், விவசாயிகளிடமிருந்து விளை பொருள்கள் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு விடுகின்றன. அதன்மூலம், உணவுப் பாதுகாப்பு காவு கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கும்  விலைப் பாதுகாப்பு கொடுப்பதை அரசாங்கம் கை விட்டுவிட்டு, விவசாயிகளை தனியார் வர்த்தகப் பெரும் புள்ளிகளிடம் தள்ளிவிடுகிறது” என்று, அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும்  அறிக்கையை இந்தக் கூட்டம் வழிமொழிகிறது.  
செப்டம்பர் 25ம் தேதி நடைபெறவிருக்கும் அவர்களது போராட்டத்தை வரவேற்கிறது.   

தமிழகத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜ-அதிமுக அரசுகளின் போக்கு மிகுந்த வேதனைக்குரியது.  மேலும் கூட்டாட்சித் தத்துவத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி என்பதால், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை  வலியுறுத்தியும்-அதற்கு துணை போகும் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும்;  செப்டம்பர் 28 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும்-நகராட்சி  மற்றும் ஒன்றியங்களிலும் “கொரோனா” பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில், “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”  நடத்துவது என்று இந்தக்  கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது. அனைத்து விவசாய அமைப்புகளும்-தொழிலாளர் அமைப்புகளும் - வணிக சங்கங்களும், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய-மாநில அரசுகளுக்கு  எச்சரிக்கை மணியடிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சியில்  ஸ்டாலின்:

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். சென்னை மேற்கு- கி.வீரமணி, சென்னை வடக்கு- கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கு- வைகோ எம்.பி, சென்னை கிழக்கு-  கே.பாலகிருஷ்ணன், தஞ்சாவூர்- இரா.முத்தரசன், திருச்சி-கே.எம்.காதர் மொய்தீன், கடலூர்-திருமாவளவன் எம்.பி, தாம்பரம்- எம்.எச்.ஜவாஹிருல்லா, கோவை- ஈஸ்வரன், பெரம்பலூர்- ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்பார்கள் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வெற்றிபெற செய்ய வேண்டும்’ விவசாயிகளுக்கு எதிரான  3 சட்டங்களை திரும்பப் பெற கோரி 28ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர-பேரூர்க் கழக நிர்வாகிகள், தத்தமது பகுதியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள்  மற்றும் முன்னணியினருடன் கலந்து  ஆலோசித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தினையும், கலந்து கொள்வோர் பெயர்களையும் முறையாக அறிவித்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



Tags : Demonstration ,district capitals ,meeting ,MK Stalin , 28th protest in district capitals condemning agricultural laws: All-party meeting chaired by MK Stalin concludes
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...