சென்னை, : தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியால் இவ்வாறு மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வெப்பசலனம் நீடித்து வருவதால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை நீடித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.