மும்பை : மகராஷ்ட்ரா மாநிலம் தானேயில் 106 வயது மூதாட்டியான ஆனந்திபாய் கொரோனாவில் இருந்து மீண்ட மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். கொரோனாவை வீழ்த்தி வெற்றிகொண்ட 106 வயது மூதாட்டிக்கு சமூகவலைதளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யான் - டோம்ப்லி பகுதியை சேர்ந்தவர் ஆனந்திபாய் பட்டேல். இவருக்கு வயது 106. இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மூதாட்டி அப்பகுதியில் உள்ள கேடிம்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையின் பலனாக மூதாட்டியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், தொடர் சிகிச்சைக்கு பின் மூதாட்டி ஆன்ந்திபாய் பட்டேலுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா ’நெகட்டிவ்’ என முடிவு வந்தது. இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது நிரம்பிய மூதாட்டி ஆனந்திபாய் பட்டேல் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் 54 லட்சத்தை கடந்துள்ள நிலையில், அதிகம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் மும்பை, புனே போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.