வெள்ளை அறிக்கை கோருவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது: கோவை.சத்யன், அதிமுக செய்தி தொடர்பாளர்

இதற்கு முன்பு ஒரு மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டு அதற்கு செலவு செய்திருந்து இப்போது கேள்வி கேட்டால் நாம் பதில் சொல்லலாம். இதுபோன்ற தொற்று என்பது தமிழகம் மட்டும் இல்லை உலகத்திற்கே முதல் முறை. மருத்துவம் சார்ந்த விஷயம் இது. மருத்துவ கட்டமைப்பிற்கு எப்படி ₹7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு வாதம். இந்த மருத்துவ கட்டமைப்பில் கட்டிலில் இருந்து ஆரம்பித்து மருத்துவ பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை அனைத்து விஷயங்களையும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட ஒரு மருத்துவ பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

ஒரு ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டிற்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பேரிடர் காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது போன்று ஒரு பொருளை விலை பேசி வாங்குவதற்கான வாய்ப்புகள் இங்கு இல்லை. ரேபிட் டெஸ்ட் கருவி கொள்முதலில் ஊழல் என்று ஒரு புகார் வைக்கப்பட்டது. 337 ரூபாய்க்கு சத்தீஸ்கர் மாநிலம் வாங்கியது என்று தெரிவித்தார்கள். நாம் ஏன் 600க்கு வாங்கினோம் என்று கேள்வியும் எழுப்பினார்கள். ஆனால், ரேபிட் கருவிக்காக எவ்வளவு போட்டிகள் நிலவியது என்று அனைவருக்கும் தெரியும்.

இந்த மருத்துவ கட்டமைப்பிற்கு இருக்கக்கூடிய தட்டுப்பாடுகள் உலகளாவிய தட்டுப்பாடுகளாக இருக்கும்போது அதை ஒருசில இடங்களில் வாங்கி மக்கள் உயிர்காக்கும் சேவையை செய்துள்ளோம். ரெமிடிசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ₹11 ஆயிரத்திற்கு விற்பதாக கூறுகிறார்கள். இதுபோன்று தட்டுப்பாடு உள்ள மருந்தையும், உபகரணங்களையும் கவனம் செலுத்தி குற்றச்சாட்டுக்கு இடம் இல்லாமல் செய்யப்பட்ட 5 மாதத்திற்கான செலவீனங்கள் தான் இவை. 80 சதவீத மக்களின் உயிரை காப்பாற்றியுள்ள இந்த நேரத்தில் கணக்கு கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் உள்ள விலை நிலவரத்திற்கும் இப்போது உள்ள விலை நிலவரத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது.

மக்களின் உயிர்காக்கும் விஷயத்தில் அரசு தீவிரமாக செயல்பட்டது. கொரோனாவிற்கு தேவையான மருந்து, தேவையில்லாத மருந்து என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. தற்போது உள்ள சூழலில் ஆக்சிஜன் மட்டுமே முக்கியமான உயிர்காக்கும் விஷயமாக உள்ளது. 2 ஆயிரம் ஐ-பிரசர் கேன்ஸ் வாங்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது. தனியாரிடம் இல்லாத மருத்துவ உபகரணங்களும், கட்டமைப்புகளும் அரசு மருத்துவமனைகளிலேயே இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளையே மக்கள் அதிகம் நாடுகின்றனர். உயிர்காக்கும் மருந்துகள் தடை இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பது மக்களுக்கே தெரிகிறது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அங்கீகாரத்தை தாங்கிகொள்ள முடியாமலேயே அரசியல் காய்நகர்த்தும் ஒரு விஷயமாகவே இது உள்ளது. எந்த மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடோ, மின் தடையோ ஏற்பட்டுள்ளதா? வெள்ளை அறிக்கை கேட்பதற்கான நோக்கம் சரியாக இருந்தால் அதை வெளியிடலாம். ஆனால், நோக்கம் சரியில்லாதபோது வெள்ளை அறிக்கை ஏன் வெளியிட வேண்டும். அரசு தவறு செய்யும் போது அது பொதுவெளியில் பேச்சுபொருளாக மாறி இருந்தால் நாம் வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால், வாய்வழியாக கேட்கும் கேள்விக்கு ஏன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஒரு அளவுகோளில் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை வைக்கக்கூடாது. உயிர்காக்கும் மருந்துகள் தடை இல்லாமல்  அரசு மருத்துவமனைகளில் கிடைப்பது மக்களுக்கே தெரிகிறது. மக்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ள அங்கீகாரத்தை தாங்கிகொள்ள முடியாமலேயே அரசியல் காய்நகர்த்தும்  ஒரு விஷயமாகவே வெள்ளை அறிக்கை கோருகிறார்கள்

Related Stories: