விவசாய விரோத சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கியதற்காக முதல்வர் எடப்பாடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மத்திய பாஜ அரசின் விவசாய விரோத சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கியதற்காக, தன்னையும், தனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ளவே இப்பாதகத்தைச் செய்தேன் என முதல்வர் பழனிசாமி, ஒப்புதல் வாக்குமூலம் அளித்து-விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: “விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு-அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பாஜக அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி” ஒரு மாநிலத்தின் முதல்வரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.

பாஜவின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி- வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன. இவ்வாறான நிலையில் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு பதிலாக, “நான் பாஜ கூட்டணியில் இருக்கிறேன். முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் ஆறு மாதங்களுக்கு-நானும், எனது அமைச்சரவை சகாக்களும், ஏற்கனவே செய்த-இப்போதும் செய்து கொண்டிருக்கின்ற-இனியும் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள-ஊழல் முறைகேடுகளில் இருந்து தப்பிக்க, பாஜவின் பாதுகாப்பு தேவை. அதனால் ஆதரித்தேன்; மன்னித்து விடுங்கள்” என்று தமிழக விவசாயிகளிடம், தண்டனிட்டு, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கலாம்.

“அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்”, “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாய சட்டம்”, “விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம்” ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து - தனது மேஜையில் வைத்துக் கொண்டு-ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு அல்லது அவற்றை அறிந்தோர் படிக்க, பக்கத்திலிருந்து கேட்டுவிட்டு, முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல்-யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு, “விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று உணர்ந்து சட்டங்களை ஆதரித்ததாக” கூறியிருப்பது, அர்த்தமற்ற செய்கையின்  உச்சக்கட்டம்.   

இந்த மூன்று சட்டங்களால் “விவசாயிகளின் சந்தைச் சுதந்திரம் பறிபோகும். அவர்களின் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை கிடைக்காது. மாநிலங்களில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பாதிக்கப்படும். பெரும்பான்மையாக உள்ள அமைப்பு சாரா சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்த பீஹார் அரசின் நடவடிக்கை தோல்வியில் முடிந்து விட்டது” என்றெல்லாம் கடுமையாக  எச்சரித்து விட்டு, உண்மையிலேயே வேளாண்துறை முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற அக்கறை மத்திய அரசுக்கு இருந்தால் வேளாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் குவித்துக் கொள்வதை விட- “மாநிலங்களில் உள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்களை விரிவுபடுத்த மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.

இன்றைக்கு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து விட்டு-கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் - விவசாயிகள் விரோத மத்திய பாஜ அரசுக்கும் சாமரம் வீசுவதையும்; தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும்; வரலாறு மன்னிக்காது. ஆயிரம் முறை ‘விவசாயி’ என்று கூறிக்கொள்வேன் என்கிறார்; பள்ளியில் படிக்கும் மாணவன் தவறாக எழுதிவிட்ட சொல்லை ஆயிரம் தடவை சரியாக எழுதும்படி ஆசிரியர் தண்டித்ததைப்போல இருக்கிறது இவர் சொல்வது. இந்த காவிரிக் காப்பாளர் அல்ல; “காவிரி ஏய்ப்பாளர்” போடும் “கபட நாடகம்”,  இன்னும் ஆறு மாதங்களுக்கு வேண்டுமென்றால் ஊழல் வழக்குகளில் இருந்து “பாஜகவின் பாதுகாப்பு” வளையத்திற்குள் நின்று தப்பித்துக் கொள்ள உதவலாம்; அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப் போகும் தண்டனையிலிருந்து  நிச்சயம் தப்பிக்க முடியாது.

முதல்வரின் “ஆதரவு அறிக்கையை” நிராகரிக்கும் வகையில் - மூத்த அரசியல் தலைவரும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். “மக்களவையில் ஆதரவு” “மாநிலங்களவையில் எதிர்ப்பு” என்ற அதிமுகவின் நகைச்சுவைக்குப் பிறகு-இப்போது முதல்வரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி. ‘என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்”  என்று, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து-விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு. தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* மத்திய அமைச்சரின் தாயார் மறைவுக்கு இரங்கல்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர்: தனது தாயார் சுலோச்சனா சுப்ரமணியத்தை இழந்து வாடும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: