×

தமிழகத்துக்கு மத்திய அரசின் விருதுகள்

சென்னை: மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியமைக்காக மின் ஆளுமை விருது மற்றும் தேசிய நீர் புதுமை விருது உள்பட பல்வேறு விருதுகளை முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு டயல்பார் வாட்டர் 2.0 என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருது மற்றும் கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக வழங்கப்பட்ட தேசிய நீர் புதுமை விருது ஆகிய விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அதேபோல ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட மின் ஆளுமை விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை பெற்றுள்ளது. 2018-19ம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், சிறந்த மாவட்ட ஊராட்சி விருது - தருமபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள் - சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த கிராம ஊராட்சி விருதுகள் - காஞ்சிபுரம் மாவட்டம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி உட்பட ஆறு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது. கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.


Tags : Tamil Nadu , Central Government Awards for Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...