நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
ஒவ்வொரு காலநிலை மாற்றத்தின் போதும் ஊட்டச்சத்து நிறைந்த கனி வகைகளை இயற்கை நமக்கு கொடையாக கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஆடி மாதம் எல்லா இடங்களிலும் கிடைக்கும் நாவல் பழம் மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது. நம் மண்ணில் விளையும் நாவல் பழம் எத்தகைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்று கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். “மாம்பழம் இனிப்பு சுவை உடையது, மாம்பழம் சீசன் முடியும் நேரத்தில் நாவல் பழம் தொடங்குகிறது. இயற்கையாகவே இவை என்ன உணர்த்துகிறது என்றால், இனிப்பு சுவையை அதிகம் சாப்பிட்டு அதனால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதைத் தவிர்க்க, துவர்ப்பு சுவையை உண்ண வேண்டும் என்கிறது.
எவன் ஒருவன் அறுசுவை நிறைந்த உணவை எடுத்துக்கொள்கிறானோ அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். மாம்பழம் அதிகம் சாப்பிடும் போது, கபம் என்னும் ஒட்டு தன்மை உள்ள பொருள் உடலில் அதிகமாகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு நாவல் பழத்தை நாம் உண்ணலாம். மாம்பழத்தையும் நாம் தவிர்க்கக் கூடாது, என்பதற்காகவே இயற்கை நாவல் கொடையை அளித்திருக்கிறது. நாவல் மரத்தின் பட்டை, விதை, நாவல் பழக்கொட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது. நாவல் இலை மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். வாய் புண்ணால் ஏற்படும் ரத்தக் கசிவை சரி செய்யும் ஆற்றல் கொண்டது. நாவல் பழத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள வாதத்தை கட்டுப்படுத்தும். நாவல் இலை, மாவிலை சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், ரத்தக்கசிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
பெண்கள் நாவல் இலை, மாவிலை, பூசு மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து தயிரில் குழைத்து முகத்தில் தடவினால் முகப்பரு மற்றும் முகப்பருவால் சிதைந்த வடு நீங்கி முகம் பொலிவு பெறும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. தொடர் வாந்தி, போன்ற பிரச்சனைகளுக்கு நாவல் பழம் சிறந்து மருந்து. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நாவல் பழம், நாவல் பழத்தின் கொட்டை மிகச்சிறந்த மருந்து. இதை தொடர்ந்தும் சாப்பிடக்கூடாது. அவை கிடைக்கும் காலத்தில் அவற்றை பயன்படுத்த வேண்டும். தற்போது மரபணு மாற்று முறையில் பெரிய நாவல் பழங்கள் கிடைக்கிறது. அதை தவிர்த்து விட்டு நமது ஊரில் கிடைக்கும் சிறிய பழங்களை சாப்பிட வேண்டும்” என்கிறார்.
-ஜெ.சதீஷ்