டெல்லி: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியாவில், இதுவரை கொரோனாவால் 54,00,620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92,605 பேர் பாதித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,133 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தம் 86,752 ஆக உயர்ந்துள்ளனர். இதனைபோல், குணமடைதோர் எண்ணிக்கை 43,03,043 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,10,824 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,36,61,060 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்புகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமாக உள்ள தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி (புதன்கிழமை) டெல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பங்கேற்று தமிழக கொரோனா நிலவரம் குறித்தும் தேவையாக நிதிகள் வழங்க கோரி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.