பொன்னேரி: மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் 56 ஊராட்சி மன்ற தலைவர்களில் 30க்கும் மேற்பட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தொடங்கியதும் ஊராட்சி மன்ற தலைவர்கள் போதிய நிதி இல்லாமை, கொரோனா தடுப்பு பணிகளில் சுணக்கம், ஊராட்சிகளில் உள்ள பணிகள் தேக்கம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குளறுபடிகள், மகளிர் சுய உதவிகள் குறித்த பல்வேறு பிரச்னைகளை எழுப்பினர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் திணறினர்.
ஒரு கட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாலாஜி, தனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதற்கு செல்ல வேண்டும் என கூறி வெளியேறினார். மீதமிருந்த அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மேலும் திணறினர். இதனால் கூட்டத்தை இதோடு முடித்துக் கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர்கள் வலியுறுத்தியதன்பேரில் அவசர, அவசரமாக கூட்டம் முடிக்கப்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிருப்தியுடன் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.