மதுராந்தகம்: மதுராந்தகம் தீயணைப்பு நிலையம், வருவாய் துறை நிர்வாகம் இணைந்து, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்து, அப்பகுதியிலுள்ள வென்காட்டீஸ்வர் கோயில் குளத்தில் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமி பிரியா, வட்டாட்சியர் கனிமொழி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் க.குமார், மதுராந்தகம் தீயணைப்பு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அங்குள்ள குளத்தில் ரப்பர் படகு மூலம் பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது,
மின்சார அறுவை கருவி கொண்டு, சூறைக்காற்றில் விழுந்த மரங்களை அகற்றுவது, இருள் சூழ்ந்த பகுதிகளில் வெளிச்சம் ஏற்படுத்துவது, சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களை பயன்படுத்துவது ஆகியவை குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், அங்கிருந்த மக்களுக்கு, பலத்த மழை பெய்யும்போது, தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கி கூறினர்.