படப்பை அருகே அதிகாலையில் மரத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 3 பேர் உயிர்தப்பினர்

ஸ்ரீபெரும்புதூர்: படப்பை அருகே நேற்று அதிகாலையில், மர தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர். தாம்பரம் அருகே பெருங்களத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் (32). படப்பை அருகே சாலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் ஷெட் அமைத்து, தொழிற்சாலைகளுக்கு தேவைக்கு மரத்திலான பேலட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு வெளியூரை சேர்ந்த 3 பேர் தங்கி வேலை செய்கின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில், மர தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றியது. இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனாலும், தொழிற்சாலை முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதற்கிடையில், தொழிற்சாலையில் தீ பரவியது தெரியாமல் தூங்கி கொண்டிருந்த 3 தொழிலாளர்களையும், பொதுமக்கள் மீட்டனர்.  இதனால் அவர்கள் உயிர் தப்பினர். தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், தொழிற்சாலைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான மர பேலட்டுகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அருகில் உள்ள வீட்டில் தீ பரவியதால், அங்கிருந்த பல பொருட்களும் எரிந்து நாசமாயின. புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: