திருப்பதிக்கு முழு நம்பிக்கையுடன் வரும் மாற்று மதத்தினர் உறுதி பத்திரத்தில் கையெழுத்திடாமல் தரிசிக்கலாம்: முதல்வர் ஜெகன் வர உள்ள நிலையில் திடீர் முடிவு

திருமலை: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்று மதத்தினர் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போடாமல்  தரிசிக்கலாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் இந்து மதத்தை அல்லாதோர், தன்னுடைய மதத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் தனது மதத்தை பதிவு செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு சந்திரபாபு முதல்வராக இருந்தபோது  நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  தொடங்கி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் வரை இந்து அல்லாத பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தபோது தங்களுடைய மதம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் கையெழுத்து இடாமல் ஏழுமலையானை வழிபட்டு சென்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் ஆந்திர அரசியலில் அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையான் மீது முழு நம்பிக்கையுடன் வரும் நிலையில், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும் தன்னுடைய மதத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் கையெழுத்திட தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இந்து அல்லாதோர் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும்போது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைக்கு விரைவில் தேவஸ்தானம் முடிவு கட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்  இம்மாதம் 23ம் தேதி திருமலைக்கு வர உள்ளார். பிரமோற்சவத்தை முன்னிட்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்க உள்ள நிலையில் வேற்று மதத்தவர் இந்து மதத்திற்கும், ஏழுமலையான் மீது கவுரவமும், பக்தியும் இருப்பதாக கூறும் டிக்லரேஷன் உறுதிப்பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பாரெட்டி திடீர் பல்டி

நேற்றிரவு மீண்டும் பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில், ‘‘திருப்பதிக்கு தினமும் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்வதால், அனைவரிடமும் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை விசாரித்து உறுதிப்படுத்த முடியாது. அதேபோல் முதல்வர் ஜெகன்மோகன் தேர்தலுக்கு முன்னதாக பாதயாத்திரை தொடங்கும்போதும், தேர்தலுக்கு பிறகும், பதவியேற்கும்போதும் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு ஏழுமலையான் மீது அதிக பக்தி உள்ளது. இதற்காகதான் உறுதி படிவத்தில் கையெழுத்திடாமல் தரிசிக்கலாம் என்று சொன்னேன்,’’ என்றார்.

Related Stories: