அம்பத்தூர்: பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜ சார்பில் அம்பத்தூர் அடுத்த பாடி சிவன் கோயில் எதிரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிர்வாகி பிரபாகரன் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் கலந்து கொண்டார். அவரை வரவேற்க தொண்டர்கள் காஸ் நிரப்பிய சுமார் 2000க்கும் மேற்பட்ட பலுன்களை கையில் வைத்திருந்தனர். அப்போது, பட்டாசு வெடித்ததால் அந்த தீப்பொறி பலூன்கள் மீது விழுந்து பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முத்துராமன் உட்பட 10க்கும் மேற்பட்ட பாஜ தொண்டர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சியை நடத்த பாஜவினர் அனுமதி பெறவில்லை. இதனையடுத்து கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையிலான போலீசார் நிகழ்ச்சி நடத்திய பாஜக நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி கே.எச் ரோட்டில் உள்ள ஜி.எஸ்.மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாஜ மாநில தலைவர் எல்.முருகனை வரவேற்க சாலைகளை மறித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாகவும்,
சமூக இடைெவளி மற்றும் முகக்கவசம் அணியாமல் நூற்றுக்கும் மேற்பட்டோரை திரட்டியதாகவும் பாஜ மத்திய சென்னை மேற்கு மாவட்ட பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் காமேஸ்வரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் மீது ஐபிசி 143, 188, 269 உட்பட 3 பிரிவில் வழக்குபதிவு ெசய்யப்பட்டுள்ளது.