×

மாநகர செய்தி துளிகள்...

கானா பாடகருக்கு வலை: கொளத்தூர் ஜிகேஎம் காலனி அருகே நின்றிருந்த ஒரு நபர், போலீசாரை பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு தப்பியோனார். அதை சோதனையிட்டபோது 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் தப்பியோடியவர் கொளத்தூர் யுனைடெட் காலனி 3வது தெருவை சேர்ந்த கானா பாடகர் பாலமுருகன் (42) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை தேடி வருகின்றனர்.

சாலையில் தவித்த சிறுமி மீட்பு: தம்பி அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, காரப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையோரத்தில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த மந்தைவெளி விசாலாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த சிறுமியை போலீஸ் எஸ்ஐ வேலு மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

கம்பெனி ஊழியர் தற்கொலை: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (35). இவருக்கு பார்வதி என்ற மனைவியும், அனிதா (12), ரேகா (10)  என்ற மகள்களும் உள்ளனர். பிளாஸ்டிக் கம்பனியில் பணிபுரிந்த முனுசாமி, ஊரடங்கால் வேலை இல்லாமல் மன உளைச்சலில் நேற்று முனதினம்  இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

• எம்ஜிஆர் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் (38). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்த சபரிநாதன் பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் ஐடி ஊழியர் பலி: பல்லாவரத்தை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் கில்பர்ட் குமார் (28), நேற்று முன்தினம் இரவு ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை வழியாக பைக்கில் சென்றபோது, விமான நிலையத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக, லாரி டிரைவர் திரிசூலத்தை சேர்ந்த விஜயகுமாரை (29) போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையர்கள் சிக்கினர்: விருகம்பாக்கம் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட சிவசங்கர் (21), ரோகித்ராஜ் (29), பிரவீன் (19), முருகன் (எ) அருண் (21), சிவராமன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக், லேப்டாப், ெசல்போன், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

9 சவரன் பறிமுதல்: விருகம்பாக்கம் தாங்கல் தெருவை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் விஜயகுமார் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகளை கொள்ளையடித்த நெல்லையை சேர்ந்த செந்தில்குமார் (எ) கார்த்திக் (28), மதுரை வாடிப்பட்டி அலங்காநல்லூரை சேர்ந்த பாலமுருகன் (29), நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்த சண்முகவேல் (23), அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 சவரன் நகை, ₹70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

பைக்கில் கஞ்சா விற்பனை: தேனாம்பேட்டை பகுதியில் பைக்கில் கஞ்சா விற்ற அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த லோகேஷ் (29), நொளம்பூர் 15வது தெருவை சேர்ந்த விஜயகுமார் (30), மதுரவாயல் சிடிஎன் நகரை சேர்ந்த கார்த்திக் (31) ஆகியோரை போலீசார் கைது ெசய்து, 7 கிலோ கஞ்சா, ₹37,100, ஐந்து செல்போன்கள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

• கொடைக்கானலில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த பம்மலை சேர்ந்த மிதுனை (30), கிண்டி ஆசர்கானா அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மூதாட்டியிடம் 10 சவரன் அபேஸ்: திருவல்லிக்கேணி வெங்கடாசலம் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி ராமநாதன் மனைவி சரோஜா (80) வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், நூதன முறையில் சரோஜாவின் செயின், வளையல்கள் என 10 சவரன் நகைகளை அபேஸ் செய்து சென்றனர்.

₹4 லட்சம் மீட்பு: பல்லாவரம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த ஜெய்கணேஷ் (44), தனது வாகனத்திற்கான கடன் தொகை ₹4 லட்சத்தை ஆன்லைன் மூலம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். ஆனால், அந்த பணம் தவறுதலாக வேறு நிறுவன கணக்கிற்கு சென்றுள்ளது. இதை திருப்பி கேட்டபோது தர மறுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார்அளித்தார். அந்த பணத்தை திருப்பி செலுத்தும்படி மேற்கண்ட நிறுவனத்திற்கு போலீசார் கடிதம் அனுப்பினர். அதன்பேரில், ஜெய்கணேஷ் கணக்கில் ₹4 லட்சம் திருப்பி செலுத்தப்பட்டது.

Tags : Municipal news drops ...
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...